Artist
Vedanayagam Sastriar
வேதநாயகம் சாஸ்திரியார்
444 songs
பெயர்: வேதநாயகம் சாஸ்திரியார்
ஆங்கில பெயர்: Vedanayagam Sasthriyar
பிறந்த தேதி: 7 செப்டம்பர் 1774
இறந்த தேதி: 1864
வயது: 90 ஆண்டுகள்
பிறந்த இடம்: திருநெல்வேலி அருகிலுள்ள பாளையங்கோட்டை (தற்போதைய தமிழ்நாடு)
இறந்த இடம்: தஞ்சாவூர்
தந்தை பெயர்: தேவசகாயம் (முன்னாள் அருணாச்சலம் பிள்ளை)
தாய் பெயர்: ஞானப்பூ
அண்ணன்/தங்கை:
1. அக்கா: சூசையம்மாள்
2. தங்கை: பாக்கியம்மாள்
வேதநாயகம் சாஸ்திரியார்
வேதநாயகம் சாஸ்திரியார் (1774 -1864), தஞ்சைக் கவிஞரும் இரண்டாம் சர்போஜியின் பிரதான புலவரும் ஆவார். இவர் பெயரில் 133 புத்தகங்களும் 400க்கும் மேற்பட்ட பாடல்களும் உள்ளன.
வாழ்க்கை
இவர் 1774 செப்டம்பர் 7 இல் ஒரு கத்தோலிக்க குடும்பத்தில் பிறந்தார்.இவர் போதகனார் தேவசகாயம் (முன்னாள் அருணாச்சலம்) ஞானப்பூ ஆகியோரின் முதலாம் மகனாவார். இவரின் அக்கா தங்கைகளான சூசையம்மாளும் பாக்கியம்மாளும் தங்கள் தாயைச் சிறுவயதிலேயே இழந்தனர். இவர் பத்தாம் அகவையில் கிறித்துவின் சிலுவைத் தோற்றத்தைக் கண்டதாக கூறப்படுகிறது.
புதிய ஏற்பாட்டின் பாதகத்தை அறிந்து, கிறித்தியான் ஃபிரீட்ரிக் சவார்சு என்ற ஒரு செருமனி நாட்டு ஊழியக்காரரை தேடி, தனது 12 ஆம் அகவையில் சீர்திருத்திய திருசபைக்கு மாறினார். சவாசின் கீழ் கல்வி பயின்றார். சவாசுக்கு, இளவரசர் சர்போஜி (பின்னாள் தஞ்சாவூரின் இரண்டாம் சர்போஜி) என்னும் மற்றொரு சீடர் இருந்தார். இவரது கல்வி, அந்நாளைய குரு-சீட மரபில் நிகழ்ந்தது.
பின்னர், தரங்கம்பாடியில் தனது வேதவியல் பட்டத்தைப் பெற்றார். இவரது பேராசிரியர்களாக கலாநிதி ஜான், கலாநிதி காமரர், புனித ரோட்டிலர் ஆகியோர் வாய்த்தனர்.
இவர் 19ஆம் அகவையில் தஞ்சாவூரைச் சுற்றியுள்ள ஊர்களில் அற்செய்திப் பள்ளியாசிரியராக அமர்ந்து இலக்கியம், கணிதம் ஒழுக்கவியலைக் கற்பித்தார். பின்னர் தலமையாசிரியராக பணியேற்றார்.
அதற்பின், தனது பள்ளி நண்பரான இளவரசர் சர்போஜி மன்னராக முடிசூடியப்பின், இவர் அரசவையின் முதன்மைப் புலவரானார். முதலில் அரண்மனையில் யாவும் சமாதானமாக இருந்தது, அரசரே இவரை முதிய உடன்பிரப்பாகத் தான் அழைத்துள்ளார். எனினும் பின்னர், கிறித்தவத்தை வெறுத்த சில ஆற்றல்மிகு பிரபுக்கள் இருப்பினும் சாஸ்திரியார் அச்சமின்றித் தனது கிறித்தவ நம்பிக்கையை வெளிப்படுத்தினார்; மற்ற மதங்களை மதித்து தன் மதத்தை கைவிடாமலிருந்தார். கடைசி வரை இவர் பாடிய பஜனைகள் யாவும் இயேசு கிறித்துவைப் போற்றியே அமைந்தன.
இவரின் நம்பிக்கை மற்றவர்பால் மிக ஆற்றலோடு திகழ்ந்தது. அந்நாளில் கடுஞ்சிறுவனான தரங்கம்பாடி சாமுவேலன் எனும் சரஸ்வதி மகால் நூலகத்தில் பணிபுரிந்த சாமுவேலன் அய்யனைக் கடும் விவாதத்தின் பின்னர் கிறித்தவத்திற்கு மதமாற்றினார்.
அளிக்கப்பட்ட பட்டங்கள்
1. வேத சிரோன்மனி
2. ஞான கவிச்சக்கிரவர்த்தி
3. ஞானதீபக் கவிராயர்
4. வேத சாஸ்திரிகள்
5. சுவிசேஷ கவிராயர்
இயற்றிய நூல்கள்
1. பெத்தலேகம் குறவஞ்சி
2. ஞான நொண்டி நாடகம்
3. ஞானத்தச்சன்
4. சென்னப் பட்டணப் பிரவேசம்
5. ஞானக் கும்மி
6. ஆதியானந்தம்
7. பராபரன் மாலை
8. வண்ண சமுத்திரம்
9. அறிவானந்தம்
10. பேரின்பக் காதல்
11. அரணாதிந்தம்
12. தியானப் புலம்பல்
வெளி இண்ணைப்புகள்:
தொண்ணூறு ஆண்டு தமிழ் நாட்டில் வாழ்ந்து தொண்டு புரிந்தவர் வேதநாயக சாஸ்திரியார். அவர் திருநெல்வேலி நகரில் தேவசகாயத்தின் மைந்தனாய்த் தோன்றினார்.அவர் பிறந்த வருஷம் 1774 என்பர். இளமையிலே அவர் தாயார் இறந்துவிட்டமையால், பாட்டனார் அவரைத் தம் வீட்டிற் கொண்டுபோய் வளர்த்தார். தாயில்லாப் பிள்ளையென்று அங்கு, யாவரும் அவர்மீது பரிவு காட்டினர். அதனை அறிந்த வேதநாயகம் அவ்வூர்ச் சிறுவரோடு சேர்ந்து ஆடிப் பாடிக் காலம் கழித்தார்.
கல்வி கற்பதற்குரிய இளமைக் காலம் இவ்வாறு விளையாட்டிற் கழியக்கண்ட தேவ சகாயம் வருத்தமுற்றார்; பாட்டனார் வீட்டிலிருந்து தம் மகனை வருவித்துத் திருநெல்வேலித் திண்ணைப் பள்ளியிற் சேர்த்தார். ஆயினும் பள்ளிப் படிப்பில் வேதநாயகத்தின் உள்ளம் பற்றவில்லை. அது கண்ட தந்தையார் கவலைகொண்டார். செய்வதொன்றும் அறியாது கர்த்தரை நாள்தோறும் தொழுது நின்றார் ; மைந்தனது உள்ளத்தைக் கல்வியிலே கவியச் செய்யவேண்டும் என்று கண்ணீர் வடித்து வேண்டினார். இந்த நிலையில் வேதநாயகத்துக்குப் பல ஆண்டுகள் கழிந்தன.
பன்னிரண்டாம் வயதில் வேதநாயகம் பண்பு நெறியிலே தலைப்பட்டார். அவரை அந் நெறியில் உய்த்த பெருமை சுவார்த்தர் என்னும் கிருஸ்தவ சீலருக்கே உரியதாகும். தஞ்சைமா நகரில் அரசரும் அறிஞரும் போற்ற அருந்தொண்டு செய்தவர் சுவார்த்தர். அவர் ஒரு தேவ காரியத்தை முன்னிட்டுத் திருநெல்வேலிக்கு அருகேயுள்ள பாளையங் கோட்டைக்கு வந்து சேர்ந்தார். தேவசகாயம் தம் மைந்தனை அழைத்துக்கொண்டு அப் பெரியாரைக் காணச் சென்றார். இளங் கொழுந்தென விளங்கிய வேதநாயகம் சுவார்த்தரது கருத்தைக் கவர்ந்தார். இங்ஙனம் அப்பெரியாரது அருளைப் பெற்ற காலமே வேதநாயகரது வாழ்க்கையின் அடிப்படை கோலிய காலம்.
"விளையும் பயிர் முளையிலே தெரியும்“ என்னும் முதுமொழிக்கிணங்க வேத நாயகத்தின் எதிர்காலச் சிறப்பை யெல்லாம் அவரது இளமைக் கோலத்திலே கண்ட சுவார்த்தர் தம்மோடு அவரைத் தஞ்சைக்குக் கொண்டு செல்ல விரும்பினார் ; தந்தையின் அனுமதி பெற்றுத் தம்முடன் அழைத்துச் சென்றார். அன்று முதல் வேதநாயகத்துக்குத் தாயும் தந்தையும், தகை சான்ற சற்குருவும் அவரேயாயினர்.
தஞ்சையில் அரசாண்ட துளசி மன்னனின் நன்மதிப்பைப் பெற்றிருந்தார் சுவார்த்தர். திருநெல்வேலியிலிருந்து அவர் திரும்பி வந்த போது இறக்கும் தருவாயில் இருந்த அம்மன்னன் மனக்கவலை நீத்துச் சாந்தியடைந்தான் ; பத்து வயதுப் பாலனாகிய இளவரசனை அவர் கையில் அடைக்கலமாக ஒப்புவித்து உயிர் துறந்தான், நெல்லையிலிருந்து அழைத்து வந்தவேதநாயகமும் தஞ்சையிலே தம்மைத் தஞ்சமாக வந்தடைந்த இளவரசனாகிய சரபோஜியும் சுவார்த்தரது அருட் காவலில் அமைந்தார்கள். கண்ணினைக் காக்கும் இமைபோல் அவ்விருவரையும் அவர் காத்து வந்தார்,
தஞ்சைமா நகரில் துளசி மன்னனிடமிருந்து நன்கொடையாகப் பெற்ற நிலத்தில் சுவார்த்தர் ஒரு திருக்கோயிலும், தமக்கு ஒரு வீடும் கட்டியிருந்தார். அந்தப் பகுதிக்கு மகர் நோன்புச் சாவடி என்பது பெயர், அங்குள்ள சுவார்த்தர் திருமனையில் வேதநாயகம் அவர் பிள்ளைபோல் வளர்ந்தார் ; அல்லும் பகலும் அவரருகே யிருந்து பணிவிடை செய்தார்.
அக் காலத்தில் தரங்கம்பாடியில் நல்ல கல்லூரி யொன்று இருந்தது. அதன் தலைமையாசிரியராகிய ஜான் என்பவர் பல கலைகளில் வல்லவராயிருந்தார். அவருடைய பள்ளியில் வேதநாயகம் சிலகாலம் படித்தல் வேண்டும் என்பது சுவார்த்தரின் விருப்பம்; அப்படியே ஆசிரியரிடம் தெரிவித்துத் தரங்கம்பாடிக் கல்லூரியில் அவரை மாணவராகச் சேர்த்தார். அங்கு இரண்டு ஆண்டுகள் வேத நூல், வான நூல் முதலிய அறிவு நூல்களைக் கற்றார் வேதநாயகம். அப்போது தரங்கம்பாடியில் இருந்து தமிழ்ப்பணி செய்து வந்த டாக்டர் ராட்லர்[2] என்னும் பெரியாருடைய பழக்கமும் அவருக்கு வாய்த்தது. தமிழ் மொழியில் இயற்கையாகவே கவிந்திருந்த அவருள்ளம் இத்தகைய சேர்க்கையால் இன்னும் அதிகமாகத் தமிழாராய்ச்சியில் ஈடுபடுவதாயிற்று.
தரங்கம்பாடிப் படிப்பு முடிந்தவுடன் தஞ்சைக்குத் திரும்பி வந்தார் வேதநாயகம். அவரது கல்விப் பயிற்சியையும் ஒழுக்கத்தையும் கண்டு களிப்புற்ற சுவார்த்தர் தஞ்சையில் ஒரு வேதக் கல்லூரி[3] நிறுவி, அதற்கு வேதநாயகத்தைத் தலைமையாசிரியராக நியமித்தார். அவரிடம் அரும்பியிருந்த கவித்திறம் அந்நிலையில் விரிந்து மணங்கமழத் தொடங்கிற்று. வேதாகமம் பயிலும் மாணவர்க்கு உணர்ச்சியும் உள்ளக் கிளர்ச்சியும் உண்டாதல் வேண்டும் என்னும் ஆசையால் பல சிறு பாடல்களை இயற்றினார் வேதநாயகம். பராபரன்மாலை, ஞானக்கும்மி, ஆதியானந்தம் முதலிய நூல்கள் அத்தன்மை வாய்ந்தனவாகும்.
பராபரன் மாலை என்பது ஓர் இனிய தமிழ்ப் பாமாலையாக இலங்குகின்றது. பரம்பொருளாகிய இறைவனது - கருணையையும் பெருமையையும் உருக்கமாக எடுத்துரைப்பது அந் நூல். "ஆண்டவனே! உன்னை அடைவதற்கு வேத நெறி யுண்டு; நேசிக்க நெஞ்சுண்டு ; நினைக்க மனமுண்டு; மாசெல்லாம் தீர்ப்பதற்கு ஏசுநாதர் அருளுண்டு; தாயிருக்கச் சேய் தவிப்பதுண்டோ“ என்ற கருத்தடங்கிய பாட்டில் இரக்கமும் உருக்கமும் நிரம்பி நிற்கின்றன.[4]
இத்தகைய பராபரன் உலகத்தை யெல்லாம் படைத்த பான்மையை வியந்து வேதநாயகம் பாடிய பாடல் 'ஞானத் தச்சன் நாடகம்' என்னும் பெயரால் வழங்குகின்றது. ஞானத் தச்சனாகிய இறைவன் ஆதி மனிதனைப் படைத்த மேன்மையும், நோவாவின் பேழையைப் பற்றிய கப்பற் பாட்டும், பிறவும் அந் நாடகத்தில் உள்ளன.
"ஞாலத்திலே அதி காலத்திலே-மிகு
ஞானத்திலே நன்னி தானத்திலே கொண்டு சாலத்தமக்குத் தேவாலய மாகவே
தம்முடைச் சாயலாய்த் தம்முடை ரூபமாய்-
வீடு கட்டினானே ஞானத் தச்சன்
வீடு கட்டினானே'.
என்னும் பாடலைப் போன்ற நூற்றுக் கணக்கான கீர்த்தனங்கள் அந்நூலில் உண்டு.
அக்காலத்தில் சரபோஜி மன்னன் தஞ்சையில் அரசுபுரிந்தான். அவன் அருங்கலை விநோதன்; அரசாளும் பொறுப்பை ஆங்கிலக் கம்பெனியாரிடம் ஒப்புவித்து விட்டுக் கலைவாணர் கலையினொடும் கவியினொடும். பொழுது போக்கினான். தஞ்சாவூரில் இன்றும் அறிஞர் போற்றும் சரஸ்வதி மஹால் என்ற அருமையான நூல் நிலையத்தை நிறுவியவன் அவனே. இத்தகைய சரபோஜி மன்னனுடன் நெருங்கிப் பழகும் நீர்மை வேதநாயகத்துக்கு இளமையிலேயே வாய்த்தது. இருவரும் சுவார்த்தையரை ஞானத் தந்தையாகக் கொண்டமையால் சகோதர முறையில் பழகி வந்தனர்.
சரபோஜியின் கொடைத் திறத்தையும் கலை நலத்தையும் பல தமிழ்ப் புலவர்கள் பாட்டிலமைத்துப் பாராட்டுவாராயினர். அவ்விதம் அம்மன்னன் மீது பாடப்பட்ட பிரபந்தங்களில் ஒன்று சரபேந்திர பூபால. குறவஞ்சி நாடகம். குறவஞ்சி நாடகங்களுள் சிறந்த குற்றாலக் குறவஞ்சியையும், தஞ்சையில் அரசர் ஆதரவு பெற்று விளங்கிய சரபேந்திர குறவஞ்சியையும் பலமுறை கற்று இன்புற்றார் வேதநாயகம்; அவற்றைப் பின்பற்றித் தாமும் குறவஞ்சி நாடகம் ஒன்று இயற்ற ஆசைப்பட்டார். கர்த்தராகிய ஏசுநாதரையே பாட்டுடைத் தலைவராக வைத்துப் 'பெத்தலேம் குறவஞ்சி' யென்னும் பெயரால் ஒரு நாடகம் இயற்றினார். “சீரேசு நாதனுக்கு ஜெய மங்களம் - ஆதி - திரியேக நாதனுக்குச் சுப மங்களம்” என்பது அக்குறவஞ்சியில் உள்ள மங்கல வாழ்த்து. ஏசுநாதர் பெருமையைக் குறவஞ்சியின் வாயிலாக வெளிப்படுத்தும் தமிழ் நூல் இது ஒன்றேயாகும்.
இந்நூல் சென்னைமா நகரில் வேப்பேரிப் பாக்கத்துக் கிருஸ்தவ சபையில் அரங்கேற்றப்பட்டது. தமிழ்ச் சுவை தெரிந்த சென்னைக் கிருஸ்தவ சபையார் அதனைத் தலைக்கொண்டு போற்றினர் ; வேதநாயகத்தைப் பல வகையாகப் பாராட்டினர் ; தேவாலயத்தின் முகப்பில் பெருஞ் சபையொன்று கூட்டி ஞானதீபக் கவிராயர் என்ற பட்டத்தை அவருக்கு - வழங்கினர் ; அறுபது வராகன் பெறும் அழகிய சிவிகையைப் பரிசாக அளித்தனர் ; வேதநாயகத்தைச் சால்வையாலும் - பட்டாலும் அலங்கரித்து, சிவிகையில் ஏற்றி வேப்பேரியை வலம் வந்து சிறப்பித்தனர்.
இவ்வாறு சென்னை நகரத்தார் செய்த சீர்மையெல்லாம் கண்டு களிகூர்ந்த வேதநாயகம் 'சென்னபட்டணப் பிரவேசம்' என்று ஒரு நொண்டி நாடகம் எழுதினார். சென்னையில் அன்பர்கள் அளித்த விருந்துகளும், செய்த சிறப்புக்களும் அந்நாடகத்தில் - இனிமையாக எடுத்துக் கூறப்படுகின்றன. ஆயினும் குறவஞ்சி நாடகம் அரங்கேறுவதற்கு முன்னின்று உதவி செய்த முத்துசாமியா பிள்ளை என்ற கிருஸ்தவரை அந்நூலில் புகழ்ந்து பாடியிருப்பது நரஸ்துதியென்று பலர் கருதுகின்றனர். 'பராபரனைப் பாடுகிறவனே பாக்கியவான்' என்று கூறும் வேத வசனத்திற்கு இந் நாடகம் மாறுபட்ட தென்பது அன்னார் கொள்கை.
தமிழ் நாட்டில் நெற்றி வேர்வை நிலத்தில் விழப் பாடுபடும் பாமர மக்கள் பாட்டுப் பாடிக் கொண்டே பணி செய்தல் வழக்கம். நிலத்தில் ஏரைப் பிடித்து உழும் பொழுதும், நாற்று நடும் பொழுதும், களை பறிக்கும் பொழுதும், பாட்டாளிகள் பாட்டுப் பாடுவார்கள். தோட்டப் பயிர் செய்பவர்கள் கிணற்றிலிருந்து தண்ணீரை இறைத்து நிலத்திலே பாய்ச்சும்போது பாடுவார்கள். அப்பாட்டுக்கு 'ஏற்றப் பாட்டு' என்பது பெயர். அதன் இனிமை யறிந்தோர் ”ஏற்றப் பாட்டுக்கு எதிர்ப் பாட்டு இல்லை” என்பர். "மூங்கில் இலை மேலே, தூங்கும் பனி நீரே, தூங்கும் பனிநீரை, வாங்கும் கதிரோனே” என்ற ஏற்றப் பாட்டு நாடறிந்த தாகும். ஏழை மக்களே பெரும்பாலும் ஏற்றமிறைத்துப் பணி செய்பவர் என்பதை யறிந்த வேதநாயகம் அவர்களுக்கு ஏற்றப்பாட்டின் வாயிலாக ஞானத்தை ஊட்டக் கருதினார். அவ்வகையில் நூறு செய்யுள் இயற்றியுள்ளார்.
ஒரு பொருளே தெய்வம்- நீ
உகந்து தொழு நெஞ்சே
உடைந்து மனம் நெஞ்சே-அந்த
ஒரு பரனுக் கஞ்சே
என்பது முதற் பாட்டு, அந்நூல் ஞான ஏற்றப் பாட்டு என்று பெயர் பெற்றுள்ளது.
இவ்வாறு ஆயிரக்கணக்கான பாடல்களை இயற்றிய வேதநாயகம் கிருஸ்தவ வேதாகமங்களின் சாரத்தைப் பாடினமையால் 'சாஸ்திரியார்' என்று பாராட்டப் பெற்றார். ஆயினும் அவர் கவிதை இன்னும் தமிழ் நாட்டில் போதிய விளக்கம் பெறவில்லை. திருமணக் காலங்களில் அவர் பாடிய மங்கல வாழ்த்துப் பாடல்கள் ஆங்காங்கு பாடப்படுகின்றன. கற்றார்க்கும். கல்லார்க்கும் களிப்பருளும் வேதநாயகம் போன்ற நல்லியற் கவிஞர்களைப் போற்றி அவர் கவிதையைப் பாராட்டும் நாளே தமிழ் நாட்டுக்கு நன்னாளாகும்.
குறிப்புகள்:
வேதநாயகம் பிள்ளையை வேதநாயகர் என்றும் வேதநாயக சாஸ்திரியாரை வேதநாயகம் என்றும் வழங்கினால் மயக்கம் ஏற்படாது.
இவர் தமிழ்ப் பேரகராதி தொகுத்துதவிய அறிஞர்.
வேதக்கல்லூரி--Theological Seminary.
"நீயிருக்க வேத நெறியிருக்க நெஞ்சமுற
வாயிருக்க நின்பதத்தில் வந்திருக்க என்மனமும் போயிருக்க நின்புதல்வன் புண்ணியனார் அன்பிருக்கத் தாயிருக்கச் சேய்க்குத் தவிப்பேன் பராபரனே”
“ஞானத்திலே பர மோனத்திலே-உயர்
மானத்திலே அன்ன தானத்திலே
கானத்திலே அமுதாக நிறைந்த
கவிதையிலே உயர் நாடு-இந்தப்
பாருக்குள்ளே நல்ல நாடு-எங்கள்
பாரத நாடு".
என்னும் பாரதியார் பாட்டை இதனோடு ஒப்பு நோக்குக.
நரஸ்துதி செய்தமையால் “மூன்று வருஷத்துக்குள்ளே பல்லக்கு நாற்பது வராகனுக்கு விற்கப்பட்டழிந்து போனதுமன்றி அதைக் கொடுத்த சினேகிதர்களுடைய பட்சமும் வெகுதூரம் குளிர்ந்து போயிற்று” என்று அத் நொண்டி நாடகத்தின் முகவுரை எழுதியவர் கூறுகின்றார்.
இரண்டு மரஞ் செய்தான்-அதில்
ஒன்றருந்தத் தீது
பண்டுவில காது-பவம்
கொண்டு வந்தாள் மாது”
என்பது மற்றொரு பாட்டு.
1850 சாதிமோதல் – ஜி.யூ.போப் வேதநாயக சாஸ்திரி (தஞ்சை வரலாறு)
சரபோஜி மன்னரின் (1777-1832) நெருங்கிய தோழரும் சரபோஜியை உருவாக்கிய சுவாட்ர்ஸ் பாதிரியாரின் வளர்ப்புச் சீடரும் தமிழ்நாட்டு ப்ராட்ஸ்டன்டு கிறிஸ்தவர்கள், தேவாலயங்களில் துதிப் பாடல்களைப் பாடுவதற்கு தமிழில் முதல்முதலாக பாடல்களை இயற்றி தந்து புகழ்பெற்று இருந்தவரான தஞ்சை வேதநாயக சாஸ்திரியாரால் (1774-1864) தமிழறிஞர் ஜி.யூ.போப் தஞ்சையிலிருந்து விரட்டப்பட்டதாக வரலாறு உண்டு. இதைப் பற்றி வேதநாயக சாஸ்திரியாரே “ஜி.யூ.போப் உபத்ரா உபத்திரவம்” என்ற நூலையும் எழுதியுள்ளார்.
அந்தக் காலக்கட்டத்தில் தமிழ்நாட்டில் வாழ்ந்துவந்த வெளிநாட்டு கிறிஸ்தவ பாதிரிமார்கள் பலரும் கிறிஸ்தவ மதத்தில் சாதிவேறுபாடு காட்டக்கூடாது என்று தீர்மானங்களை நிறைவேற்றி நடைமுறைப்படுத்தியிருக்கின்றனர். ( அந்தத் தீர்மானத்தின் குறிப்பை பதிவின் படத்தில் தந்துள்ளேன்.) கூடுதலாக கிறிஸ்தவர்களான தாழ்த்தப்பட்டவர்களால் வழங்கப்படும் உணவையும் உண்ண வேண்டும் என்று அந்தத் தீர்மானம் வலியுறுத்தி இருக்கின்றது.
படிக்க:
♦ கடவுள் மீது போர் தொடுத்த கார்ல் மார்க்ஸ் !
♦ இந்தியாவில் கிறித்தவ மதமாற்றத்தின் வரலாறு!
கிறிஸ்தவ மதத்தில் சாதி வேறுபாடு பார்க்கக்கூடாது என்ற இந்தப் போக்கை வேதநாயக சாஸ்திரியார் ஏற்றுக் கொள்ளவில்லை. எனவே ஜி.யூ.போப் பாதிரியாராகப் பணிபுரிந்த தேவாலயத்தில் வேதநாயக சாஸ்திரியாரின் பாடல்களைப் பாடக்கூடாது என்று தடைவிதித்து இருக்கின்றார் (தஞ்சையில் உள்ள அந்த தேவாலயம் வேதநாயக சாஸ்திரியாரின் வீட்டிற்கு எதிரில் இன்றும் உள்ளது. அந்தத் தெருவின் பெயர் மிஷன் தெரு). இந்தப் பிரச்சினை உண்டாக்கிய மனத்துயரினால் ஜி.யூ.போப் தஞ்சை செயிண்ட் பீட்டர் கல்லூரியின் (அந்தக் காலத்தில் இந்தப் பள்ளி கல்லூரி என்று அழைக்கப்பட்டது) தலைமைப் பொறுப்பில் இருந்தும் தேவாலயத்தின் பொறுப்பிலிருந்தும் விடுபட்டு தஞ்சையை விட்டே சென்று விடுகிறார்.
“தஞ்சாவூர் சுவிசேட கவிராய வேதநாயக சாஸ்திரியாரின் சுருக்கமான சரித்திரம்” என்ற இந்த நூலில் உள்ள ஒருசில சுவையான செய்திகளை இந்தப் பதிவில் அறிமுகப்படுத்தியுள்ளேன். இவை போன்ற பல அரிய சுவையான வரலாற்றுச் செய்திகள் இந்நூலில் பல இடங்களில் எழுதப்பட்டுள்ளது. அ.மாதவையாவின் புகழ்பெற்ற நாவலான “கிளாரிந்தா”வின் கதாநாயகியும் பிராமணராகப் பிறந்து கிறிஸ்தவராக மாறி முதல்முதலாக திருநெல்வேலியில் கிறிஸ்தவத் தொண்டு செய்த கிளாரிந்தா அம்மையாரைப் பற்றியும் அவருடைய கணவரைப் பற்றியும் அவருக்கு ஞானஸ்தானம் வழங்கிய சுவாட்ர்ஸ் பாதிரியாரைப் பற்றியும் பல சுவையான வரலாற்றுக் குறிப்புகள் இந்நூலில் இடம்பெற்றுள்ளன. இந்நூலை நீங்கள் படிக்க விரும்புவீர்கள் என்ற எண்ணத்துடன் இந்நூலின் இணைப்பைத் தந்துள்ளேன்.
தஞ்சாவூர் சுவிசேட கவிராய வேதநாயக சாஸ்திரியாரின் சுருக்கமான சரித்திரம்
பொ.வேல்சாமி: தஞ்சாவூர் கரந்தைத் தமிழ்க் கல்லூரியில் பயின்று புலவர் பட்டம் பெற்றவர். தமிழக வரலாற்று ஆய்வில் ஈடுபாடு கொண்டவர். வரலாற்றுத் தரவுகளை மறுவாசிப்பு செய்வதும் மாற்று வரலாற்றை உருவாக்குவதும் இவரது எழுத்தின் முக்கிய நோக்கம். முகநூலில் தொடர்ச்சியாக எழுதுகிறார்.
எழுதிய நூல்கள்:
பொற்காலங்களும் இருண்ட காலங்களும்
கோவில் நிலம் சாதி
பொய்யும் வழுவும்
வேதநாயக சாஸ்திரியின் வேதசாஸ்திரக்கும்மி
தமிழ்நாட்டில் பதினெட்டு, பத்தொன்பதாம் நூற்றாண்டுகளில் சீர்திருத்தக் கிறித்தவம் விரை வாகப் பரவியது. இவ்வாறு பரவிய கிறித்தவம் தமிழ் மண் சார்ந்த கிறித்தவ இலக்கியப் படைப்பாளிகள் சிலரை உருவாக்கியது. இவ்வாறு உருவாகி, சமய எல்லையைத் தாண்டி அறிமுகமாகியுள்ள ஒரு கவிஞர் வேதநாயக சாஸ்திரியார். இவரது ‘பெத்லகேம் குறவஞ்சி’ சீர்திருத்தக் கிறித்தவத்திற்குக் கிடைத்த கொடை எனலாம்.
பிறப்பும் வாழ்வும்:
கிறித்துவத்தின் தொட்டில் என்று கூறப்படும் திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள பாளையங் கோட்டை நகரில் 1772இல் இவர் பிறந்தவர். இவரது தந்தை அருணாசலம் பிள்ளை கத்தோலிக்க சமயத்தை 1760இல் தழுவியவர். தேவசகாயம் பிள்ளை என்பது இவரது கிறித்தவப் பெயராயிற்று. தமது சமய மாற்றத்துக்குப் பின் பிறந்த தம் மகனுக்கு வேத போதகம் என்ற பெயரை இட்டார். இதுவே பின்னர் வேதநாயகம் என்றாயிற்று.
vedanayagam sasthiri 1784இல் திருநெல்வேலி வந்த சுவார்ட்ஸ் என்ற சீர்திருத்தக் கிறித்தவ சபைக் குரு பன்னிரண்டு வயதான வேதநாயகரைக் காண நேர்ந்தது. வேத நாயகத்தின் அறிவாற்றலால் ஈர்க்கப்பட்ட சுவார்ட்ஸ், வேதநாயகத்தின் தந்தையின் அனுமதியுடன் தஞ்சா வூருக்கு அவரை அழைத்துச் சென்றார். அங்குச் செயல்பட்டு வந்த ‘நவீன பள்ளியில்’ வேதநாயகர் மாணவராகச் சேர்க்கப்பட்டார். இப்பள்ளியின் பாடத்திட்டம் குறித்து இராபர்ட் எரிக்ஃபிரிக்கன் பெர்க் என்பவர் பின்வருமாறு குறிப்பிடுகிறார்.
“பாடத்திட்டம் தமிழும் ஆங்கிலமும் கலந்தது. வேதாகமும், வேதபாடங்களும் அத்தோடு மிக நவீனமான பகுத்தறிவொளிக் கொள்கைகளில் பிறந்த அறிவியலும், தொழில்நுட்பமும் பாடத் திட்டத்தில் இருந்தன. இம்மாதிரியான கல்வி இந்தியாவில் அப்போது வேறெங்கும் கிடைத்த தில்லை.
இத்தகைய நவீனகல்வியைக் கற்றுக் கொடுத்த இப்பள்ளியில் வேதநாயகத்துடன் பயின்றவர் சர போஜி ராஜா. கல்வி கற்று முடித்த பின்னர் ஆசிரிய ராகவும், தலைமையாசிரியராகவும் வேதநாயகர் பணி யாற்றினார். கிறித்தவ மறைபரப்பாளர்களுடனும், திருச்சபை உயர் அதிகாரிகளுடனும் அவருக்கு நெருக்கமான தொடர்பிருந்தது. சைவ வைணவ சமயத்தினரின் கதாகாலட்சேபப் பாணியைப் பின் பற்றி கிறித்துவசமயம் சார்ந்த கதாகாலட்சேபக் குழுவை உருவாக்கினார். இக்குழுவுடன் தமிழ் நாட்டின் பல ஊர்களுக்கும் சென்று கிறித்துவம் சார்ந்த கதா காலட்சேப நிகழ்ச்சிகளை நிகழ்த்தி வந்தார். அத்துடன் சிறிதும் பெரிதுமாக எண்பதுக்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். ‘சாஸ்திரி வந்தல்லோ எண்பது நூல்களைச் சாதித்தானடி’ என்று வேதசாஸ்திரிக் கும்மியில் குறிப்பிட்டுள்ளார். இதற்குப் பின் இவர் நாற்பது நூல்களை எழுதி யுள்ளார். எனவே தான் இவரது கல்லறையில் 120 நூல்களை இவர் எழுதியுள்ளதாகக் குறிப்பிடப் பட்டுள்ளது. 1864ஆம் ஆண்டில் தமது 92ஆவது வயதில் இவர் மரணமடைந்தார். இவரது உடல் தஞ்சையில் அடக்கம் செய்யப்பட்டது.
வேதசாஸ்திரக் கும்மி
1814இல் வேதநாயகர் எழுதிய இந்நூல் தற்போது விற்பனையில் இல்லை. இருபது ஆண்டுகளுக்கு முன் இந்நூலை தஞ்சை சரஸ்வதிமகால் நூலகம் வெளி யிட்டது. நூலைக் குறித்து தினமணி நாளேட்டில் கண்டனக் கடிதம் வெளிவந்த பின்னர் இரண்டு அல்லது மூன்று படிகளே விற்றிருந்த நிலையில் விற்பனையை நிறுத்தி வைத்துவிட்டனர். நூலின் எஞ்சிய படிகள் என்ன ஆயிற்று என்பது தெரிய வில்லை.
இந்நூலில் உள்ள தேர்ந்தெடுத்த பாடல்களைக் குறுநூலாக கிறித்துவ மிஷனரிகள் ஆங்காங்கே சென்ற நூற்றாண்டின் தொடக்கத்தில் வெளியிட்டு உள்ளதாகத் தெரிய வருகிறது. 1915ஆம் ஆண்டிலும் 1969ஆம் ஆண்டிலும் ‘சாஸ்திரக்கும்மி’ என்ற பெயரில் இந்நூல் வெளியாகியுள்ளது.
1969இல் இந்நூலைப் பதிப்பித்த திரு தாமஸ் ரத்தினம் தமது முகவுரையில்,
“சங்கைக்குரிய வேதநாயகம் சாஸ்திரியாரவர்கள் கிறித்துவர்கள் தங்களின் பழைய மதமாகிய இந்துமத சாஸ்திரங்களை விட்டுவிடாமல், தலைமுறை தத்துவமாய் இறுகப் பிடித்துச் சாதித்து வருகிறார்கள் என்பதைக் கண்டு சாஸ்திரக் கும்மியைப் பாடினார்கள்”
என்று எழுதியுள்ளார். நூலின் உள்ளடக்கம் இக்கருத்தை உறுதி செய்கிறது. சான்றாக சில பாடல்களைக் காண்போம். நல்லநாள், நல்லநேரம் என்று கணித்துப் பார்க்கும் செயல் குறித்து,
“ஆகாத நாளிலே புத்தியறிந்தவ
ளாலே நஷ்டம் வரும் என்றும்
சாகாமல் தாலி அறுப்பள் என்று சொன்ன
சாஸ்திரம் ஏதடி ஞானப் பெண்ணே.”
“ஆகாத நாளில் சமைந்தவள் தாலி
அறுபட்டுப் போவது மெய்யானால்
வாகான நாளில் சமைந்தவளும் அவ
மங்கிலி ஆவானேன் ஞானப் பெண்ணே.”
“சாஸ்திரம் பார்த்துச் சமைந்தாளே பின்னும்
சாஸ்திரத்தாலி புனைந்தாளே
சாஸ்திரக் காரப் பார்ப்பாத்தியவள்
தாலியறுப்பானேன் ஞானப் பெண்ணே.”
“நாளுந்தேதியும் திங்களும் பார்த்து
ராசிப் பலன்க ளெலாம் பகுத்து
நீளுந் தாரகை நன்றெனத் தீதென
நிமித்தங் கேட்ப தார் ஞானப் பெண்ணே.”
“பிள்ளைக்கு நூறு வயதென்று சொல்லியே
பெரிய சாதகம் ஒன்றெழுதிக்
கள்ளத் தனமாக முப்பதில் நாற்பதில்
கண்டம் என்பானேன் ஞானப் பெண்ணே.”
என்று பகடி செய்யும் சாஸ்திரியார்,
பறவைகள், ஒலியெழுப்பல், பூனை,
நாய் குறுக்கேவரல் என்பன வற்றை
மையமாகக் கொண்ட நம்பிக்கைகளை
“காக்காய் கத்துதல் ஆந்தை கத்துதல்
காரியத்தைக் கெடுத்துப் போட்டால்
போக்காய் மற்றக் கருவிகள் கத்தலில்
புண்ணியம் உண்டாமோ ஞானப் பெண்ணே.”
“தன் வயிறு தனக்குப் பசிக்கையில்
சகல பட்சியும் கத்தாதோ?
உன் இழவுக்குக் கத்துதென் றெண்ணி நீ
உலைந்திருப்பானேன் ஞானப் பெண்ணே.”
“பூனையும் நாயும் குறுக்கிட்டால் கன
பொல்லாப்பு வரும் என்று சொன்னாய்
பூனையும் நாயும் உன் வீட்டில் இருப்பது
பொல்லாப் பல்லவோ ஞானப் பெண்ணே.”
என்று பகடி செய்கிறார். சில சாதியினரைத் தொட்டால் தீட்டு என்ற கருத்து குறித்து
“உன்னைப் போல மனுஷனானவன்
உன்னுடை ரூபஞ் சரியானேன்
உன்னைப் போல் ஆத்துமத்தைக் கொண்டிருப்பவன்
என்னமாய்த் தீட்டானான் ஞானப் பெண்ணே.”
“மாட்டைத் தொட்டுத் தலைமுழுகாத நீ
மனுஷனைத் தொட்டு ஸ்நானம் செய்தாய்
மாட்டைப் பார்க்க மனுஷன் இளப்பமோ
மறுமொழி கொடு ஞானப் பெண்ணே.”
“மாட்டு மூத்திரத்தைக் குடித்தே அந்த
மாட்டுச் சாணியைப் பூசிக் கொண்டு
மாட்டைத் தானே கும்பிட்டு நின்ற வுன்
மாட்டுப் புத்தியோ ஞானப் பெண்ணே.”
“நாயைத் தொட்டுத் தலை முழுகாத நீ
நரனைத் தொட்டுத் தலை முழுகப்
பேயைக் கும்பிட்ட புத்தியினால் வந்த
பேதைமைப் புத்தியோ ஞானப் பெண்ணே.”
“மிருகத்திலும் மனுஷனை இப்படி
மெத்தவும் நிஷிதப் படுத்து வது
அருவருக்கப் படத்தக்க பாவ மென்
றறிந்த தில்லையோ ஞானப் பெண்ணே.”
என்று வினா எழுப்புகிறார்.
இதுபோன்ற முற்போக்கான பல கருத்துக்கள் வேதசாஸ்திரக் கும்மியில் இடம்பெற்றுள்ளன. ‘கிறித்துவச் சித்தர்’ என்று குறிப்பிடுமளவுக்கு அவரது சீர்திருத்தக் கருத்துகள் உள்ளன. ஆனால் அவரது வாழ்க்கையுடன் இப்பாடல்களை இணைத்துப் பார்த்தால் தன் சுயசாதி அடையாளத்தைத் துறக் காதவராகவே அவர் வாழ்ந்துள்ளார் என்பது தெரிய வருகிறது. இது குறித்து விரிவாக ஆராய்வது இக் கட்டுரையின் தலைப்புடன் பொருந்தாது. என்றாலும் ஒரு படைப்பாளியின் படைப்புக்கும் அவனது வாழ்க் கைக்கும் இடையிலான இடைவெளியை உணர்ந்து கொள்ள ஒன்றிரண்டு செய்திகளை அறிந்து கொள்வது அவசியமாகிறது.
1834ஆம் ஆண்டில் பதினோரு செய்யுட்களை இவர் எழுதியுள்ளார். இவற்றின் இறுதியில் ‘புதுக் குருமார் தமிழ்ச்சனங்களுக்குச் செய்த கொடுமையைப் பற்றிப் பராபரனை நோக்கிக் கூப்பிட்ட முறைப் பாடு’ 1834ஆம் ஆண்டு என்று எழுதியுள்ளார். இக்குறிப்பு இச் செய்யுள்கள் எழுதப்பட்ட சூழலை உணர்த்துகிறது. இது குறித்து இப்பதிப்பைப் பதிப்பித்த சவரிமுத்து அடிகளார்
“இப்பதிகம் எழுதப்பட்ட சூழ்நிலையைக் கவிஞரது குறிப்பு வெளிப்படுத்துகிறது. 19 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தஞ்சை மாவட்டத் திலுள்ள கிறித்துவச் சபைகளினூடே சாதிப் பிரச்சினை தாண்டவமாடிற்று. மேல்சாதி, கீழ்ச்சாதி என்ற பிரிவினைப் போராட்டத்தில் சுவார்ச்சையருக்குப் பின் வந்த கோலேப்பையர் முதலானவர்கள் கீழ்ச் சாதியினரைச் சார்ந்து ஏனைய சாதியினரை ஒடுக்கினர்.”
என்று குறிப்பிடுகிறார். அத்துடன் ‘அவ்வாறு ஒடுக்கப் பட்டவர்களின் அவலக் குரல்கள்’(!) இப் பதிகத்தில் இடம்பெற்றுள்ளதாக விளக்கியுள்ளார்.
தொடக்ககாலக் கிறித்துவத் திருச்சபைக்குள் நிலவிய மேட்டிமை சாதிய மேலாண்மைக்கெதிராக குருக்கள் சிலர் மேற்கொண்ட செயல்பாடுகள் வேதநாயகருக்குப் பிடிக்கவில்லை. சாதிய வேறு பாட்டை கிறித்துவத்தில் நீக்க முயன்ற குருக்களால் தாம் பாதிக்கப்பட்டதாக அவர் எழுதியுள்ள பதிகங்களில் இடம்பெறும் வரிகள் வருமாறு
‘குருக்களும் பகைவரானார் கோவிலும் வேறதாயிற்று.’
‘சங்கையை இழந்தோம் பின்னும்
சாதியின் நலமுமற்றோம்,’
(சங்கை - மரியாதை)
சாதி அடிப்படையிலான கல்லறைகளுக்குத் தடை விதிக்கப்பட்டதால் தமக்கு நேர்ந்த துயரத்தை ‘கல்லறைக் கிடமுமுற்றுக் காட்டினுக் ககற்றப் பட்டோம்’ என்று வெளிப்படுத்தியுள்ளார். இறுதியில்,
“ஆதரவருளி யெங்கள் ஆபத்தை நீக்கி மேலும்
சாதியின் இடறலின்றிச் சபையெலாந் தழைக்கச் செய்து வேதநாயக கன்பாட்டெங்கள் விண்ணப்பங்களைக் கேட்டன் பாய் ஏதமே பொறுத் தெந்நாளும் எம்மையாள் ஏசுநாதா.”
என முடிக்கிறார். தமிழறிஞர் ஜி.யூ.போப் சாதி வேறுபாட்டை கிறித்துவத்தில் நீக்க முயன்றதை எதிர்த்து ‘போப்பையரின் உபத்திரா உபத்திரவம்’ என்ற குறுநூலை அவர் வெளியிட்டுள்ளதாக அ.மார்க்ஸ் குறிப்பிட்டுள்ளார்.
a_sivasubramanian_321சாதி குறித்த இத்தகைய அணுகுமுறையைக் கொண்டிருந்த வேதநாயக சாஸ்திரியார் ‘வேத சாஸ்திரக் கும்மி’ என்ற முற்போக்கான நூலை ஏன் எழுதினார் என்ற வினா எழுவது இயற்கை. அய்ரோப்பிய மிஷனரிகளின் அன்பிற்குரியவராக அவர் இருந்தமையால் புதிய கிறித்தவர்கள் தம் பழைய பழக்கவழக்கங்களைக் கைவிடும் வகையில் நூலொன்றை எழுத வேண்டிய கடப்பாடு அவருக்கிருந்துள்ளது.
இந்நூல் முழுவதையும் படித்துப் பார்த்தால் ‘சாதிகள்’ என்று சாஸ்திரியார் சுட்டுவது சைவ, வைணவ, நாட்டார் சமயநெறிகளைப் பின்பற்று வோரைத்தான் என்பது புலனாகிறது.
மேலும் அவரைப் பொறுத்த அளவில் சுய சாதிப்பற்று என்பது மூடப்பழக்கவழக்கமாகத் தோன்றவில்லை.
தம் பாரம்பரிய மதத்தைத் துறந்து கிறித்தவர்களாக மாறியவர்களால் தம் சுயசாதி அடையாளத்தைத் துறக்க இயலவில்லை. தமிழ்க் கிறித்து வத்தின் அடிப்படைக் குறைபாடு இதுதான். இதி லிருந்து வேதநாயக சாஸ்தியாரும் தப்பவில்லை.
- என் கணவனைப் போல்en kanavanaip polKeerthanaigal
- என் பிரிய நாயகனைen piriya naayaganai
- என்தன் பரம குருendhan parama kuruKeerthanaigal
- என்னாலே ஜீவன் விடுத்தீரோ ஸ்வாமீennaalae jeevan vidutheero svaameeKeerthanaigal
- என்னையா நீரெங்கேennaiyaa neerengae
- என்றைக்கு காண்பேனோendraikku kaanbenoKeerthanaigal
- என்றைக்குச் சாவேனோendraikkus saaveno
- எப்படியும் பாவிகளைeppadiyum paavigalaiKeerthanaigal
- எழுந்தருளுமேசு சுவாமிezhundharulumesu suvaami
- ஏகனே ஏகாம்பரக்eganae egaambarak
- ஏசுவையே துதிசெய்esuvaiyae thudhiseyKeerthanaigal
- ஏதனாதி தேவனே சிலுவைedhanaadhi devanae siluvai
- ஏதன் காவடர் தீதைedhan kaavadar theedhai
- ஏன் மயங்கிறாய் மனமேen mayangiraay manamae
- ஏலேல கூட்டம் வாக்கிலல்லோக்elela koottam vaakkilallok
- ஏலேலமடி ஏலேல மடிelelamadi elela madi
- ஐயனே நரர்மீதிரங்கிaiyanae nararmeedhirangiKeerthanaigal
- ஐயரே நசரேக்கு நோக்குaiyarae nasarekku nokku
- ஐயா உனதருள்aiyaa unadharulKeerthanaigal
- ஐயா உமது சித்தம்aiyaa umadhu sithamKeerthanaigal
- ஐயா எது வேணும்aiyaa edhu venum
- ஐயா வழாதேaiyaa vazhaadhae
- ஐயாவுன தருள் புரிaiyaavuna tharul puriKeerthanaigal
- ஐயாவுன்றிருப் பாதமேaiyaavundrirup paadhamae
- ஐயையா நான் பாவிaiyaiyaa naan paaviKeerthanaigal
- ஐயோ மனுவால் வந்தaiyo manuvaal vandha
- ஒ லோலம் ஒலோலம் ஒலமேo lolam ololam olamae
- ஒன்றா மெய்ப் பொருளேondraa meyp porulae
- ஒரு தேவாதிப திரிலோகா திபoru devaadhiba thirilogaa thiba
- ஒரு பரா பரகா ரணoru paraa paragaa rana
- ஒருதா விண்ணாள் குருபதி சரணம்orudhaa vinnaal kurubadhi saranamKeerthanaigal
- ஒரே மைந்தனே பரன் மகனேorae maindhanae paran maganae
- ஓ இஸ்திரி வித்தேசையாo isthiri vithesaiyaa
- ஓ ஓ ஓ துங்க சீவி பரிசுத்தo o o thunga seevi parisutha
- ஓ மனுவேலரசேo manuvelarasae
- ஓ மிக்கா மிக்கா மிக்காo mikkaa mikkaa mikkaa
- ஓ ஸ்திரீ வித்தேசையாo sthiree vithesaiyaaKeerthanaigal
- ஓசனா கிருபாசனாosanaa kirubaasanaa
- ஓசனா வனந்தா ஓசதானந்தாosanaa vanandhaa osadhaanandhaa
- ஓம் நமாவே யனாதிom namaavae yanaadhi
- ஓம் பரா யோவாom paraa yovaa
- கண்டறிந்துணர்ந்து பாருங்கோkandarindhunarndhu paarungo
- கண்டேன் பரமண்டலம்kanden paramandalam
- கருணா கரமே அம்பரமே வாkarunaa karamae ambaramae vaa
- கருணா சமுத்திராkarunaa samuthiraa
- கருணாகரனே பரமேkarunaagaranae paramae
- கருணாகரா வாதரிkarunaagaraa vaadhari
- கருணையே யோவாkarunaiyae yovaa
- கருணைவைத் தெந்தனைக்karunaivaith thendhanaik
- கர்த்தனே காவுனதாkarthanae kaavunadhaa
- கர்த்தா பர்த்தாkarthaa parthaa
- கல்லு மல்லவே காயம்kallu mallavae kaayamKeerthanaigal
- காணுஞான சீலனைkaanugnaana seelanai
- காத்தாள் வல்லவனேkaathaal vallavanae
- கிருபா கரனே தோத்திரkirubaa karanae thothira
- கிருபா தயாப சத்தியkirubaa thayaaba sathiya
- கிருபை கூருமையனேkirubai koorumaiyanae
- கிருபை யாசனா கிறிஸ்kirubai yaasanaa kiris
- கிருபைப் பரா கிருபைப் பராkirubaip paraa kirubaip paraa
- கிறிஸ்தேசு நீ பரிந்துkiristhesu nee parindhu
- கும்பிடுகிறேன் நான்kumbidugiren naanKeerthanaigal
- குற்ற மெத்தத் தனையோkutra methath thanaiyo
- கூர்ந்திஸ் பிரீத்துச் சாந்துkoorndhis pireethus saandhu
- கொண்டானடிக்கிறான் வெல்லைkondaanadikkiraan vellai
- கொலைக் காவனம் போனாரன்னமேkolaik kaavanam ponaarannamae
- கோற்றாக்கி உயிரைkotraakki uyirai
- சகத்திருள் மாறவேsagathirul maaravae
- சதாபதி கிறிஸ்தைsadhaabadhi kiristhai
- சந்த தந்தாளிணைsandha thandhaalinai
- சந்தத மங்கள மங்களமேsandhadha mangala mangalamaeKeerthanaigal
- சமாதானம் ஓதும்samaadhaanam odhumKeerthanaigal
- சமைய சகாயா தயாபsamaiya sagaayaa thayaaba
- சரணமையா சரணமையாsaranamaiyaa saranamaiyaa
- சரணம் சரணம்saranam saranamKeerthanaigal
- சரணம் சரணம் அனந்தா சச்சினாந்தாsaranam saranam anandhaa sacchinaandhaaKeerthanaigal
- சரணாம்புய விசித்திராsaranaambuya visithiraa
- சரணு சரணு சரணையாsaranu saranu saranaiyaa
- சரணே மகத்துவ தேவா சரணா திந்தமேsaranae magathuva devaa saranaa thindhamae
- சருவ தயாபா நீயேsaruva thayaabaa neeyae
- சருவாதிக்கத் தேவகுமாராsaruvaadhikkath devagumaaraa
- சருவேசுரா ஏழைப்பாவsaruvesuraa ezhaippaavaKeerthanaigal
- சற்றே யெனைப்பாருsatre yenaippaaru
- சாந்த சுதா வடிவேsaandha sudhaa vadivae
- சாமி நாடே சிந்தனைsaami naadae sindhanai
- சாமி நின்னடி தந்துsaami ninnadi thandhu
- சாமி நீ கிருபைsaami nee kirubai
- சாமிக் கேனிந்த பாடுsaamik kenindha paaduKeerthanaigal
- சாமிக்கே தெரியாதsaamikke theriyaadha
- சாமியுந்தன் தயை புரிவாயேsaamiyundhan thayai purivaayae
- சிட்டிக் காதி யந்தா தேவ மைந்தாsittik kaadhi yandhaa deva maindhaa
- சித்தமிரங்குவாய் நீயையாsithamiranguvaay neeyaiyaa
- சித்தம் மகிழ்ந்தெனைsitham magizhndhenai
- சிந்தனைப் படாதே நெஞ்சமேsindhanaip padaadhae nenjamaeKeerthanaigal
- சிம்மாசனக் கருணைப்ராsimmaasanak karunaipraa
- சிவ தவ சுப நவ தெய்வsiva thava suba nava theyva
- சீருதாரி மாதயாபிseerudhaari maadhayaabi
- சீரெருசலை நகர் தேவநமாseererusalai nagar devanamaa
- சீர் ஏசு நாதனுக்குseer esu naadhanukkuKeerthanaigal
- சீவ தேவ ஏகனேseeva deva eganae
- சீவனே நித்திய சீவனேseevanae nithiya seevanae